ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரிகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது, பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஸ்ரீபெரும்புதூர் அருகே பட்டுநூல் சத்திரம் பகுதியில் வட்டார போக்குவரத்து அலுவலகம் இயங்குகிறது. இங்கு 40க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்கின்றனர். இந்த அலுவலகத்தில் புது வாகன பதிவு, புதுப்பிப்பு சான்றிதழ் உள்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. இதையொட்டி, வாகன பதிவு, புதுப்பித்தல் உள்பட பல பணிகளுக்கு அதிகளவில் அதிகாரிகள் லஞ்சம் வாங்குவதாகவும், இடைத்தரகர்கள் தொல்லை அதிகரித்து வருவதாகவும் காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு துறைக்கு ஏராளமான புகார்கள் வந்தன.
இதைதொடர்ந்து கடந்த 2ம் தேதி மாலை காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புதுறை டிஎஸ்பி கலைசெல்வன் தலைமையில் 10க்கும் மேற்பட்ட போலீசார், ஆர்டிஓ அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.