நித்திரவிளை: குமரி மாவட்டம் மேற்கு கடற்கரை பகுதிகளில் உள்ள மீனவ கிராமங்களில் அலை தடுப்பு சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக தினமும் ஏராளமான டிப்பர் லாரிகளில் பாறாங்கல் மேற்கு கடற்கரை சாலை வழியாக கொண்டு செல்லப்படுகிறது. இந்த லாரிகளில் சாலை போக்குவரத்து துறை அனுமதித்ததை விட அதிகமான பாரத்தை ஆபத்தான நிலையில் ஏற்றி செல்கின்றனர். மேலும் இந்த லாரிகளில் நம்பர் பிளேட் இருக்காது. அதோடு அதிகமான டிரிப் எடுக்க வேண்டும் என்பதற்காக அதிவேகமாக லாரியை டிரைவர்கள் இயக்குகின்றனர். இதனால் இந்த லாரிகள் எதிரே வரும் போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மரண பயத்தில் தான் பயணிக்க வேண்டி உள்ளது.