ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்? என அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில் கீழடி, ஆதிச்சநல்லூரில் அகழாய்வுகளை தொடர கோரி முத்தாலங்குறிச்சி காமராஜ், திருமுருகன், நாராயணமூர்த்தி, நாகராஜன் உள்ளிட்ட பலர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன்  மீண்டும் விசாரணைக்கு வந்தன. அப்போது; தமிழக அரசு சார்பில்; தமிழக தொல்லியல் துறையில் காலிப்பணியிடங்களுக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வு செய்துள்ளோம்.

விரைவில் பணி நியமனம்செய்யவுள்ளோம். ஆதிச்சநல்லூர், கொடுமணல், கொற்கை, மயிலாடும்பாறை உள்ளிட்ட 7 இடங்களில் தொல்லியல் ஆய்வை தொடர மத்திய தொல்லியல் துறையிடம் அனுமதி கேட்டுள்ளோம். அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் துவங்கும். கீழடி 5 மற்றும் 6ம் கட்ட ஆய்வுகள் குறித்து விரைவில் முடிவுகள் என கூறினர். அப்போது குறிப்பிட்ட நீதிபதிகள் அரசுக்கு பல்வேறு கேள்விகளை முன்வைத்தது. ஆதிச்சநல்லூர் அகழாய்வு நடந்து 15 ஆண்டுகள் ஆகியும் இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை.ஆதிச்சநல்லூர் அகழாய்வு தொடர்பாக இதுவரை இறுதி அறிக்கை தாக்கல் செய்யாதது ஏன்?

தமிழகத்தில் வேறு இடங்களில் நடந்த அகழாய்வு பற்ற்றிய அறிக்கைகளின் நிலை என்ன? தமிழகத்தில் மத்திய தொல்லியல் துறை தற்போது அகழாய்வு நடத்தாதது ஏன்? தொல்லியல் கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் வசதி மைசூருவில் மட்டுமே உள்ளது; கல்வெட்டுகளை படிமம் எடுக்கும் கிளையை ஏன் சென்னையில் வைக்கக்கூடாது ? தமிழகத்தில் ஏன் முழுமையான மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளக்கூடாது? தமிழக தொல்லியல் துறை விண்ணப்பத்தின் மீது எப்போது மத்திய தொல்லியல் துறை அனுமதி கிடைக்கும்.

தமிழகத்தில் ஏன் முழுமையாக மத்திய தொல்லியல் துறை ஆய்வு மேற்கொள்ளக் கூடாது என்பது குறித்து மத்திய அரசு தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர்.

Related Stories: