ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி

லக்னோ: உத்தரபிரதேசம் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தை நேரில் சந்தித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆறுதல் கூறினர். உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல ராகுல்காந்தி மற்றும் பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீஸ் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம், ஹத்ராசை சேர்ந்த 19 வயது தாழ்த்தப்பட்ட இளம்பெண், 4 பேர் கொண்ட கும்பலால்  பாலியல் பலாத்காரம் செய்து  கடுமையாக தாக்கப்பட்டார். இவர்  சிகிச்சை பலனின்றி இறந்தது, நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால், பாதிக்கப்பட்ட  பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக  காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும், பொதுச் செயலாளர் பிரியங்கா  காந்தியும் நேற்று முன் தினம் டெல்லியில் இருந்து ஹத்ராசுக்கு காரில் கிளம்பினர். ஆனால், ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களின்  வாகனங்களை நொய்டா தேசிய நெடுஞ்சாலையில் உத்தர பிரதேச போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால், கார்களில்  இருந்து இறங்கிய ராகுல், பிரியங்கா காந்தியும், ‘நாங்கள் நடந்தே செல்கிறோம்’ என்று கூறி, ஹத்ராசை நோக்கி நடந்தனர். போலீசார் அவர்களை தடுத்தனர்.

அப்போது நடந்த  தள்ளுமுள்ளுவில், ராகுலை போலீசார் கீழே தள்ளி விட்டனர். பின்னர், ராகுல், பிரியங்காவை உத்தர பிரதேச போலீசார் கைது செய்தனர். தொடந்து, ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், தடையை மீறிய ராகுல், பிரியங்கா காந்தி உட்பட 200 பேர் மீது உபி போலீசார் நேற்று 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று மீண்டும் ராகுல்காந்தி தலைமையில் எம்பிக்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சி குழுவினர் ஹத்ராஸ்க்கு புறப்பட்டனர். அப்போது ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி மீண்டும் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் செல்ல ராகுல் காந்தி, பிரியங்கா காந்தியுடன் 5 பேர் மட்டுமே செல்ல போலீசார் அனுமதி அளித்தனர். மற்றவர்களை நெடுஞ்சாலையிலேயே தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டனர். தங்களையும் அனுமதிக்க வேண்டும் என அங்கு திரண்ட காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ராகுல், பிரியங்கா உள்ளிட்ட 5 பேரும் ஹத்ராஸ் சென்று பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.

இதக்கிடையே உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர் போலீசார் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். ராகுலை தொடர்ந்து காங்கிரஸ் தொண்டர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.

Related Stories: