கடையம்: கடையம் ராமநதி மலையடிவார பகுதியில் உலா வரும் யானைகளை விரட்ட தீயை கொளுத்தி வனத்துறையினர் விரட்டி வருகின்றனர். கடையம் ராமநதி அணை மேல் பகுதியில் தனியாருக்கு சொந்தமான விவசாய நிலங்கள் மற்றும் தோட்டம் உள்ளன. இதில் வெய்க்காலிபட்டியைச் சேர்ந்த விவசாயி குமரனுக்கு சொந்தமான 28 ஏக்கர் தோட்டத்தில் தென்னை, மா, முந்திரி நட்டு பராமரித்து வருகிறார். கடந்த 25ம் தேதி குமரன் தோட்டத்திற்குள் சோலார் மின்வேலியை சேதப்படுத்தி புகுந்த யானைகள், 8 தென்னை மரங்களின் குருத்தை தின்று சாய்த்து பிடுங்கி எரிந்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. தகவலறிந்த வனத்துறையினர் விரைந்து வந்து, யானையால் சேதமான சோலார் மின்வேலியை போர்க்கால அடிப்படையில் சரி செய்தனர்.