திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் கூலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மாவூர் கிராமத்தில் இருந்து திருவள்ளூர், சென்னை பகுதிகளுக்கு செல்லவேண்டுமென்றால் 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலைக்கு சென்று பேருந்து மூலம் சென்று வருவார்கள். இந்நிலையில், அந்த கிராமத்திற்கு செல்லும் சாலை கனகம்மாசத்திரம் கிராமத்தை சேர்ந்த ஜெயராமன் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் பல வருடங்களாக பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். அந்த சாலை பழுதடைந்ததால் அதை சீரமைக்கும் பணியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது. இந்த பணியை செய்த ஒப்பந்ததாரர் சாலையின் 2 புறங்களிலும் அகலப்படுத்தினார். இதனால் ஏற்கனவே சாலை தன் பட்டாநிலத்தில் செல்கிறது என கூறி ஜெயராமன், நீதிமன்றத்தை நாடியுள்ளார். நீதிமன்றத்தில் ஜெயராமனுக்கு சாதகமான தீர்ப்பு வந்ததாக கூறப்படுகிறது.