தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு 25.96% மட்டுமே அடிப்படை வசதி: ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்

சென்னை: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கு உரிய அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் 2018-2019 கணக்கின்படி 37,183 பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்துவதற்கான சாய்வு பாதை உள்ளிட்ட வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர 59,152 தனியார்  பள்ளிகளிலும் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.  மொத்தத்தில் 25.96 சதவீதம் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. 68.86 சதவீதம் பள்ளிகளில் சிறப்பு குழந்தைகள் தடையில்லாமல் செல்ல சாய்தளம் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன.

பள்ளிகளில் படிக்கும் சிறப்பு குழந்தைகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்று மத்திய அரசு விதி வகுத்துள்ளது. சிறப்பு குழந்தைகளை அனுமதிக்கும் பள்ளிகளுக்கு போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நிதி வழங்க வகை செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து நிதியாக 2020-2021ம் கல்வி  ஆண்டுக்கு 14 கோடியை 98 லட்சம் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு நிதியாக 3 கோடியே 69 லட்சம் ஒதுக்கப்படவுள்ளது.  பார்வை குறை உள்ள மாணவர்களுக்கு உதவ இதுவரை 4 லட்சத்து 24,285 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2020 கல்வி கொள்கையில் ஒவ்வொரு மாணவ, மாணவிகளின் திறனை வளர்க்க வகை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: