சென்னை: அலோபதி டாக்டர்களுக்கு இணையாக இந்திய முறை மருத்துவர்களுக்கும் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் வழங்குவது குறித்து நகராட்சி நிர்வாகத் துறை செயலர் பரிசீலிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சென்னை, மதுரை, திண்டுக்கல், வேலூர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றும் சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானி மருத்துவர்கள் 15 பேர் ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நாங்கள் இந்திய முறை மருத்துவமான சித்தா, ஆயுர்வேதம், ஓமியோபதி மற்றும் யுனானியில் பட்டம் பெற்றுள்ளோம். கடந்த 1989ல் பணியில் நியமிக்கப்பட்டோம். கடந்த 1996 மாநகராட்சி பணி விதிகளின் படி பணியாற்றுகிறோம். இந்திய மருத்துவ முறையின் கீழ் நியமிக்கப்படுவோருக்கு இதுவரையில் பதவி உயர்வோ, ஊதிய உயர்வோ வழங்கப்படவில்லை. கடந்த 26.11.2010ல் வெளியான நகராட்சி நிர்வாக அரசாணையில் அலோபதி டாக்டர்களுக்கு ஊதிய உயர்வுடன் கூடிய காலமுறை பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், எங்களுக்கு இதுபோல் எதுவும் வழங்கப்படவில்லை. நாங்களும் அதே நிலையில் மருத்துவர்களாக பணியாற்றுகிறோம்.