சென்னை: எண்ணூர் முகத்துவாரத்தில் ரசாயன கழிவுநீர் விடுவதால் நண்டு, மீன்கள், இறால் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் அழியும் அபாயம் உள்ளது. இதனால் வாழ்வாதாரம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எண்ணூரில் தாழங்குப்பம், நெட்டுகுப்பம், காட்டுகுப்பம் போன்ற பல மீனவ கிராமங்கள் உள்ளன. இங்குள்ள முகத்துவாரத்தில் மீன், இறால், நண்டுகளை பிடித்து அதன் மூலம் மீனவர்கள், தங்களது வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் எண்ணூர் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்சாலைகளின் கழிவுகள், முகத்துவாரத்தில் விடப்படுகிறது. சில நேரங்களில் கழிவுகளுடன் ரசாயனமும் கலந்து வருவதால் ஆறு மாசடைந்து, மீன்கள், இறால், நண்டுகள் செத்து மடிகின்றன. ஆற்றில் மூழ்கி நண்டு, இறால்களை பிடிக்கும் மீனவர்களுக்கும் தோல் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக மாறி வருகிறது. முகத்துவார ஆற்றில் ரசாயன கழிவு விடக்கூடாது என மீனவர்களும் சமூக நல அமைப்புகளும் பலமுறை போராட்டம் நடத்தியும் யாரும் கண்டுகொள்ளவில்லை.