ராஜிவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல்: சென்னை ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதியாக சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேரறிவாளன், உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு 90 நாட்கள் பரோல் வழங்கக் கோரி அவரது தாயார் அற்புதம்மாள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.  இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, பரோல் மனுவை நிராகரித்துவிட்டதாக தமிழக அரசு தெரிவித்தது.. இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், வி.எம்.வேலுமணி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அற்புதம்மாள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம், சிறை விதிகளில் விலக்களித்து பேரறிவாளனுக்கு பரோல் வழங்க உத்தரவிட வேண்டும் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், பரோல் விண்ணப்பங்கள் மீது இரண்டு வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என சட்டத் திருத்தம் கொண்டு வரும்படி ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட நீதிமன்ற உத்தரவு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என அரசுத்தரப்புக்கு கேள்வி எழுப்பினர். பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தீர்ப்பை தள்ளிவைத்தனர். இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதிகள் நேற்று தீர்ப்பளித்தனர். அத்தீர்ப்பில், பேரறிவாளனுக்கு 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்படுகிறது. இந்த உத்தரவு நகல் பெற்ற நாளிலிருந்து 30 நாட்கள் அவர் பரோலில் செல்ல அனுமதிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: