அரபிக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 11 பேரை இந்திய கடலோர காவல்படை பத்திரமாக மீட்டது..!! துரிதமான செயலுக்கு குவியும் பாராட்டுக்கள்!!

கன்னியாகுமரி:  அரபிக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்கள் 11 பேரை இந்திய கடலோர காவல்படையினர் பத்திரமாக மீட்டுள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையிலிருந்து 11 மீனவர்கள் கடந்த 14ம் தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றுள்ளனர். கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக நேற்று முன்தினம் படகின் இன்ஜின் பழுதடைந்துள்ளது. இதனால் நடுக்கடலில் மீனவர்கள் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டது. பின்னர், படகானது திசைமாறி மும்பை கடற்பகுதிக்கு சென்றது. இதையடுத்து கடந்த 2 நாட்களாக கடலில் மீனவர்கள் தத்தளிக்கும் தகவலறிந்த இந்திய கடலோர காவல்படையினர் தேடுதல் வேட்டையை தொடங்கின.

இதன் பின்னர், 11 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீனவர்களை தேடும் பணியில் 2 கப்பல்கள் மற்றும் ஒரு விமானம் பயன்படுத்தப்பட்டது. இதையடுத்து மீட்கப்பட்ட மீனவர்கள் அனைவரும் கன்னியாகுமரி மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் விரைவில் ஒப்படைக்கப்படவுள்ளனர். கடந்த 2 நாட்களாக கடலில் தத்தளித்த மீனவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதால் உறவினர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தொடர்ந்து, மிகவும் துரிதமாக செயல்பட்டு மீனவர்களை மீட்ட கடலோர காவல்துறையினரை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Related Stories: