கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் எடப்பாடியுடன் இன்று பிரதமர் மோடி ஆலோசனை: வீடியோ கான்பரன்சிங்கில் நடக்கிறது

சென்னை: கொரோனா வைரஸ் தடுப்பு பணிகள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட 7 மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார். கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் மார்ச் 24ம் தேதி முதல் செப்டம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு அமலில் இருந்தாலும் தமிழகம், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அதேநேரம், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குணமடைவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இந்தியாவில் மட்டும் நேற்று வரை சுமார் 55 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பால் 90 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். உலக அளவில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் நோய் பாதிப்பு இந்தியாவில்தான் அதிகம். இந்த பரபரப்பான சூழ்நிலையில் பிரதமர் மோடி இன்று காலை 10.30 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் டெல்லி, பஞ்சாப், ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம் ஆகிய 7 மாநில முதல்வர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்துகிறார்.  அப்போது, கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக விவாதிக்க உள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் ஒழிப்பு நடவடிக்கைக்கு மத்திய அரசு இன்னும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கோரிக்கை வைக்க திட்டமிட்டுள்ளார். அதேபோன்று தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் நிவாரண உதவிகள் குறித்து பிரதமரிடம் எடப்பாடி பட்டியலிடவும் திட்டமிட்டுள்ளார்.

மத்திய அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. ஆனாலும், மாநில அரசு மத்திய அரசு அறிவித்துள்ள அனைத்து தளர்வுகளையும் பின்பற்றுவது இல்லை. இதற்கான காரணம் குறித்தும் முதல்வர்கள் பிரதமரிடம் விளக்குவார்கள்.

மேலும், நாடு முழுவதும் பள்ளிகளை கடந்த 21ம் தேதி முதல் படிப்படியாக திறக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது. ஆனாலும் தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதுகுறித்தும் பிரதமர் மோடி, மாநில முதல்வர்களின் கருத்துகளை கேட்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ கான்பரன்சிங் நிகழ்ச்சியின்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளும் கலந்து கொள்கிறார்கள்.

Related Stories: