பள்ளிப்பட்டு: ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள கிருஷ்ணாபுரம் நீர்தேக்க அணை முழு கொள்ளளவு எட்டியுள்ளதால், உபர்நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு வாரங்களில் 4 முறை நீர்தேக்க அணையிலிருந்து உபரிநீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அணையிலிருந்து 300 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டதால், பள்ளிப்பட்டு அருகே கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், பள்ளிப்பட்டு தாசில்தார் செல்வகுமார் தலைமையில் வருவாய் துறையினர் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், சொரக்காய்பேட்டை, நெடியம், சாமன்தவாடா ஆகிய பகுதிகளுக்கு இடையில் கொசஸ்தலை ஆற்றில் தரைப்பாலங்கள் நிரம்பி வெள்ளம் பெருக்கெடுத்து ஒடுவதால் கரையோர கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.