பாட்னா: வேளாண் மசோதாக்களுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட எம்.பி.க்கள் மாநிலங்களவையில் கண்ணியம் தவறி விட்டதாகவும், அவர்கள் மீதான சஸ்பெண்ட் நடவடிக்கை சரியானதே என்றும் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தெரிவித்துள்ளார். விவசாய மசோதாக்கள் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்த ராஜ்யசபாவில் எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் உள்ளிட்ட 8 பேர் நடப்பு கூட்டத்தொடரின் எஞ்சிய அலுவல்களில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். தொடர்ந்து, சஸ்பெண்ட் செய்யப்பட்ட 8 எம்பிக்களும் உடனடியாக அவையிலிருந்து வெளியேற வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டார். இது தொடர்பாக 8 எம்.பி.க்களும் நாடாளுமன்ற வளாகத்தில் காந்தி சிலை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.