சென்னை: வைரஸ் தொற்று குறைந்தாலும் கொரோனா சிகிச்சை வசதிகளை குறைக்க கூடாது என்று தனியார் மருத்துவமனைகளுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னையில் கடந்த 20ம் தேதி வரை 1 லட்சத்து 55 ஆயிரத்து 639 பேருக்கு கொரோனா உறுதியானது. இதில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 857 பேர் குணமடைந்துள்ளனர். 3,058 பேர் மரணம் அடைந்துள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளதால் கொரோனா பாதிப்பு மற்றும் வரும் நாட்களில் தொற்று அதிகரித்ததால் எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் மாநகராட்சி சுகாதார இணை ஆணையர் மதுசூதன் ரெட்டி, மாநகர நல அலுவலர் ஜெகதீசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.