வருசநாடு: கண்டமனூர் அருகே கணேசபுரம்- தெப்பம்பட்டி செல்லும் ரோட்டின் குறுக்கே உள்ள பெரிய ஓடை பாலம் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் சேதமடைந்து விட்டது. இதனால் வாகனங்களில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகி வந்தனர். இதனால் புதிய பாலம் கட்டி தருமாறு கோரிக்கை விடுத்தனர். இதை ஒருவழியாக ஏற்று, புதிய பாலம் கட்டும் பணிக்காக நெடுஞ்சாலை துறை சார்பில் ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பால வேலைகள் துவங்கப்பட்டது.
ஆனால் ஆரம்பித்த சில நாட்களிலே நிறுத்தப்பட்ட பணிகள் தற்போது வரை துவங்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் தெப்பம்பட்டி, வேலப்பர் கோயில், கணேசபுரம், கண்டமனூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்து வருகின்றனர். குறிப்பாக இரவுநேரங்களில் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலம் கட்டும் பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.