சென்னை: சென்னை அயனாவரத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் அளித்த பேட்டி: தமிழகத்திலும் கொரோனா தொற்றால் இதுவரை 5 லட்சத்து 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4.70 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். 55 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.. கொரோனா பரவல் 5 சதவீதமாக குறைந்துள்ளது. தொற்று பாதித்தவர்களைவிட குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மக்களின் வாழ்வாதாரம், பொருளாதாரம் பாதிக்காமல் இருப்பதற்காக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறித்து மக்களிடம் அச்சம் நீங்கி விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இருந்த போதிலும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். தனியார் மருத்துவமனைகள் கொரோனா சிகிச்சை நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். அதை மீறினால் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.