புதுடெல்லி: இந்தியாவில் ஒரே நாளில் 96,424 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 52 லட்சத்தை தாண்டியது. நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கையை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலை 8 மணிக்கு வெளியிட்டது. இதில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 96 ஆயிரத்து 424 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 52 லட்சத்து 14 ஆயிரத்து 677 ஆக அதிகரித்துள்ளது.
ஒரே நாளில் 1,174 பேர் பலியாகி உள்ளனர். இதனால் மொத்த இறப்பு எண்ணிக்கை 84 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை 41 லட்சத்து 12 ஆயிரத்து 551 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். குணமடைவோர் சதவீதம் 78.86 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 10 லட்சத்து 17 ஆயிரத்து 754 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு விகிதம் 1.62 சதவீதமாக சரிந்துள்ளது.
* தற்போது மகாராஷ்டிரா, ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா, உத்தரப்பிரதேசம் ஆகிய 5 மாநிலங்களில் மட்டுமே கொரோனா தொற்று அதிகளவில் உள்ளது. மொத்த பாதிப்பில் 59.8 சதவீதம் பேர் இம்மாநிலங்களை சேர்ந்தவர்கள்.* இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தகவலின்படி, இதுவரை நாடு முழுவதும் 6 கோடியே 15 லட்சத்து 72 ஆயிரத்து 343 பேரிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.* இதே போல இந்த 5 மாநிலங்களிலேயே தான் குணமடைந்தவர்களும் அதிகம். மொத்த குணமடைந்தவர்களில் 59.3 சதவீதம் பேர் மேற்கண்ட 5 மாநிலத்தை சேர்ந்தவர்கள்.