சென்னை: மத்திய பாஜ அரசின் விவசாய விரோத சட்டங்களுக்கு அதிமுக ஆதரவு தெரிவித்திருப்பதன் மூலம் விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம் செய்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய பாஜ அரசின் விவசாயம் தொடர்பான 3 அவசரச் சட்டங்களால் தனியார் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகள் செல்லக்கூடிய அபாயம் உள்ளது. எனவே, மூன்று அவசர சட்டங்களையும், மத்திய பாஜ அரசு திரும்பப் பெறவேண்டும். கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்): விவசாயிகளுக்கு விரோதமான மூன்று மசோதாக்களை அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்திருப்பதானது விவசாயிகளுக்கு செய்திருக்கும் பெருந்துரோகமாகும். மத்திய, மாநில அரசுகளின் இப்போக்கினை எதிர்த்து ஒன்று திரண்டு போராட வேண்டும்.