சரத்குமார் வேண்டுகோள் தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்

சென்னை: தூய்மைப் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என சமக தலைவர் சரத்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் பெரும்பாலும் கையுறை மற்றும் முகக்கவசம் அணியாமல் பணியில் ஈடுபடுகின்றனர். கொரோனா தொற்று சமயத்தில் சுகாதாரமான இடங்களுக்கு சென்று வந்தால் கூட, சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து வருகிறோம். ஆனால், சுகாதார பணியில் ஈடுபட்டிருக்கும் தூய்மை பணியாளர்கள் வெறும் கைகளால் அசுத்தமான பகுதிகளை சுத்தம் செய்வது வேதனை அளிக்கிறது. அவர்களின் உடல் நலன் மற்றும் பாதுகாப்பை கருதி, மீண்டும் உபயோகிக்கக்கூடிய ரப்பர் கையுறைகள் வழங்கப்பட்டு, அவர்கள் அதை பயன்படுத்துவதையும், முகக்கவசங்கள் அவசியம் அணிவதையும் மாவட்ட நிர்வாகங்கள் மேற்பார்வை செய்ய வேண்டும். தமிழக அரசு அதனை உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: