நடிகர் சூர்யா படப்பாடலில் சர்ச்சை புகார் பரிசீலித்து காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம்: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று பட பாடலுக்கு எதிரான புகாரை பரிசீலித்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நடிகர் சூர்யா நடித்துள்ள சூரரைப்போற்று படத்தில் இடம்பெற்றுள்ள மண் உருண்ட மேல, மனுச பய ஆட்டம் பாரு எனத் தொடங்கும் பாடலில், “கீழ்சாதி உடம்புக்குள்ள ஓடுறது சாக்கடையா, அந்த மேல் சாதிக்காரனுக்கு ரெண்டு கொம்பு இருந்தா காட்டுங்கையா” என்ற வரிகள் இடம்பெற்றுள்ளன. இந்த பாடல் வெளியாகியபோதே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் தர்மபுரியை சேர்ந்த கார்த்திக் என்பவர், அனைத்து சாதியினரும் அமைதியாக வாழும் தமிழகத்தில் இதுபோன்ற பாடல் பிரச்னை ஏற்படுத்தும் என்பதால், 2022 வரை படத்துக்கு தடை விதிக்க கோரி  காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை, இதனால் கார்த்திக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் கூறுகையில், மனுதாரரின் புகார் காவல் கண்காணிப்பாளருக்கு வந்து சேரவில்லை என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதி காவல் கண்காணிப்பாளருக்கு மீண்டும் புகார் மனுவை அளிக்க அறிவுறுத்தி, அந்த புகாரை சட்டப்படி பரிசீலித்து நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.

Related Stories: