போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும்: விஜயகாந்த் வலியுறுத்தல்

சென்னை: போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். தேமுதிக நிறுவனத்தலைவர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு வழங்கப்படவேண்டிய வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடை பணம், மற்றும் எந்த பணப்பலன்களும் கிடைக்காமல் தன்குழந்தைகளை மேல்படிப்பு படிக்க வைப்பதற்கும், திருமணம் நடத்துவதற்கும் வழியில்லாமல் தவித்து வருகின்றனர். ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு உடனடியாக அவர்களுடைய பணத்தை அவர்களுக்கு கிடைக்க செய்ய வேண்டும். நீதிமன்றம் கொடுக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தும் கொடுக்காதது ஏன்?.

மேலும் அரசு போக்குவரத்து கழகம் தனியார் பேருந்துகளை வாடகைக்கு அமர்த்தி அரசு பேருந்து வழித்தடத்தில் போக்குவரத்தை இயக்க அரசாணை போடப்பட்டுள்ளது. இதனால் அரசு போக்குவரத்து கழகம் படிப்படியாக தனியார் மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது. அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திற்காகவும், தங்கள் உரிமைக்காகவும் அவர்கள் ஓய்வு பெரும் போது அவர்கள் பணத்தை திரும்ப பெறவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மற்றத்துறைகள் போன்று பொது சேவையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக ஊழியர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: