டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு கலைஞர் பெயர் சூட்டுவது குறித்து அரசுதான் முடிவு எடுக்க வேண்டும்: ஐகோர்ட் அறிவுறுத்தல்

சென்னை: டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு மறைந்த முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க  வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கலைஞர் தமிழ்ப் பேரவை மாநிலச் செயலாளர் பி.ராதாகிருஷ்ணன், சென்னை உயர்  நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு அறிஞர் அண்ணா ஆலந்தூர் மெட்ரோ என்றும், சென்ட்ரல் மெட்ரோ  ரயில் நிலையத்திற்கு எம்.ஜி.ராமச்சந்திரன் சென்னை சென்ட்ரல் மெட்ரோ என்றும், சிஎம்பிடி மெட்ரோ ரயில் நிலையத்திற்கு ஜெ.ஜெயலலிதா சிஎம்பிடி  மெட்ரோ ரயில் நிலையம் என்றும் பெயர்களை முதல்வர் பழனிசாமி சூட்டியுள்ளார்.

ஆனால், சென்னையில் மெட்ரோ ரயில் சேவைக்கான திட்டத்தை முதன்முதலாக வடிவமைத்து மத்திய அரசிடம் அனுமதி பெற்றவர் முன்னாள்  முதல்வர் கலைஞர் கருணாநிதி. தற்போது எதிர்கட்சித் தலைவராக இருக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இதற்காக ஜப்பான் நாட்டுக்கு பயணம்  மேற்கொண்டு அங்கு உள்ளது போன்ற மெட்ரோ திட்டத்தை சென்னையிலும் கட்டமைக்க திமுக ஆட்சிக்காலத்தில் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

மெட்ரோ திட்டத்துக்கு முக்கிய காரணமான கலைஞரின் முயற்சியை திட்டமிட்டு மறைக்கவும், அரசியல் காரணங்களுக்காகவும் மெட்ரோ ரயில்  நிலையங்களுக்கு 3 முன்னாள் முதல்வர்களின் பெயர்களை தமிழக அரசு சூட்டியுள்ளது.

அந்த வரிசையில் தேனாம்பேட்டை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு டாக்டர் கலைஞர் கருணாநிதி டிஎம்எஸ் மெட்ரோ ஸ்டேஷன் என பெயர்  சூட்ட உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்த மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் நீதிபதி ஹேமலதா அமர்வு முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, மறைந்த முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி பெயரை டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு சூட்ட சென்னை  உயர் நீதிமன்றம் முடிவு எடுக்க முடியாது. அரசுதான் முடிவு எடுக்க வேண்டும் என அறிவுறுத்தி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Related Stories: