ஓசூர்: ஓசூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை வருவாய்த்துறை சார்பில் விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் தற்போது அதிகளவு மழை பெய்து வருவதால், திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவும் அதிகரித்துள்ளது. இதனிடையே பெங்களூரு பகுதியில் உள்ள கழிவுநீரும் சேர்ந்து அதிகளவு வெளியேறுவதால், ஓசூர் அருகே உள்ள கெலவரப்பள்ளி அணைக்கு 1120 கன அடி தண்ணீரானது அதிகளவு நுரையுடன் வந்து கொண்டிருக்கிறது. இதனைத்தொடர்ந்து, இந்த அணையிலிருந்து சுமார் 1208 கன அடி தண்ணீரானது தென்பெண்ணை ஆற்றில் வெளியேற்றப்படுவதால், திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.