சத்தியமா என் பெயர் கொரோனா தாங்கோ... பாதிரியார் வைத்த பெயரால் படாத பாடுபடும் இளம்பெண்

திருவனந்தபுரம்: கேரளாவில் பெற்றோர் தனக்கு வைத்த கொரோனா என்ற பெயரால் 34 வயதான ஒரு இளம்பெண் இப்போது படாத பாடுபட்டு வருகிறார். உலகம் முழுவதும் தற்போது கொரோனா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் அச்சமடையும் நிலை உருவாகியுள்ளது. இந்த நோய் வராமல் இருக்க பலரும் முகக்கவசம் அணிந்தும், கையில் சானிட்டசைருடனும் தான் சென்று கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், ஒருவருக்கு கொரோனா என்று பெயர் இருந்தால் அவரது நிலை என்னவாகும் என்பதற்கு உதாரணமாக கேரளாவில் ஒரு இளம்பெண் உள்ளார். கேரள மாநிலம், கோட்டயம் அருகே உள்ள சுங்கம் என்ற பகுதியை சேர்ந்தவர் ஷைன் தாமஸ். மீனவரான இவரது மனைவிக்குத் தான் அவரது பெற்றோர் கொரோனா என பெயர் வைத்து சிக்கலில் மாட்ட வைத்துள்ளனர். இதுகுறித்து கொரோனா கூறியதாவது: நான் பிறந்ததும் ஆலப்புழா முதுகுளத்திலுள்ள சர்ச்சில் எனக்கு ஞானஸ்நானம் அளிப்பதற்காக எனது பெற்றோர் கொண்டு சென்றனர். அப்போது எனக்கு ஒரு பெயரை வைக்கும்படி பாதிரியார் ஜேம்சிடம் கூறினர்.

பிடித்தமான பெயர் ஏதும் இருக்கிறதா? என்று என்னுடைய பெற்றோரிடம் பாதிரியார் கேட்டுள்ளார். அப்படி எதுவுமில்லை என்று பெற்றோர் கூறினர். இதையடுத்து, அந்த பாதிரியார் எனக்கு சூட்டிய பெயர்தான் கொரோனா. அதற்கு கிரீடம் என அர்த்தம் என்றும் பாதிரியார் ஜேம்ஸ் கூறியுள்ளார். அந்தப் பெயர் வைக்கும்போது அதனால் எனக்கு பெரும் சிக்கல் வரும் என்று எனது பெற்றோரும், பாதிரியார் ஜேம்சும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இப்போது எங்கு சென்றாலும் என்னுடைய பெயரைக் கேட்டால் சிலர் நான் பொய் சொல்வதாக நினைத்து  நம்ப மறுக்கின்றனர். சிலர் ஆச்சரியத்துடனும், பீதியுடனும் பார்க்கின்றனர். நான் அடிக்கடி ரத்த தானம் செய்ய மருத்துவமனைக்கு செல்வது உண்டு. ரத்தம் கொடுக்கும்போது அங்குள்ள விண்ணப்பத்தில் நான் எனது பெயரை எழுதும்போது, ‘ஏன் கொரோனா என்று எழுதுகிறீர்கள்? உங்களுடையை பெயரை எழுதுங்கள்,’ என்று கூறுவார்கள். ஆனால், உண்மையிலேயே என்னுடைய பெயர் கொரோனா தான் என்று கூறினாலும் நம்ப மாட்டார்கள். இவ்வாறு கொரோனா கூறினார்.

Related Stories: