சென்னை: வியாசர்பாடி பக்தவச்சலம் காலனியை சேர்ந்த பாஸ்கர் மகள் நிவேதிதா (18). இவர், நேற்று கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுத சென்றார். அங்கு, இவருக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்தபோது, வெப்பநிலை அதிகமாக உள்ளதாக கூறி தனியாக ஒரு அறையில் அமர வைத்துள்ளனர். தேர்வு தொடங்கிய பிறகு இவரிடம் எழுதுபொருள், கையுறை, முக கவசம் உள்ளிட்ட பொருட்களை மட்டுமே கொடுத்துள்ளனர். வினாத்தாள் வழங்கவில்லை. இதுபற்றி மாணவி கேட்டபோது, முறையான பதிலளிக்கவில்லை, என கூறப்படுகிறது. நீண்ட இழுபறிக்கு பிறகு மாலை 4.20 மணிக்கு மாணவிக்கு வினாத்தாள் வழங்கி உள்ளனர்.