சின்னசேலம்: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கல்வராயன்மலை தாலுகா, சின்னசேலம் தாலுகாவிலும் கடந்த ஒரு வார காலமாகவே கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கல்வராயன்
மலையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக கோமுகி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் 43 அடியாக உயர்ந்துள்ளது. கோமுகி அணை நிரம்பி உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கல்வராயன்மலையில் மலை முழுவதிலும் விவசாயிகள் சுமார் 2,000 ஏக்கரில் மானாவாரி மரவள்ளி சாகுபடி செய்துள்ளனர். இந்த பயிர்கள் மழையை நம்பியே வளர்கிறது. இந்நிலையில் கல்வராயன்மலையில் கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக மலை கிராமங்களில் பயிரிட்டுள்ள மரவள்ளி தற்போது செழித்து வளர்கிறது. இதனால் மலை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.