துபாயிலிருந்து மீட்பு விமானத்தில் சென்னை வந்த பயணி நடுவானில் மரணம்

சென்னை:  துபாயிலிருந்து சென்னைக்கு 190 இந்தியர்களுடன் தனியார் மீட்பு விமானம் நேற்று காலை சென்னைக்கு வந்து கொண்டிருந்தது. காலை 9 மணியளவில் விமானம் சென்னையை நெருங்கிக்கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்த திருவள்ளூர் மாவட்டம், வானகரம் அருகே அயனம்பாக்கத்தை  சேர்ந்த பயணி கல்யாணசுந்தரம் (55) என்பவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதையடுத்து விமான பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதுகுறித்து விமானிக்கும் தகவல்  தெரிவித்தனர்.

இதுபற்றி விமானி சென்னை விமானநிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, விமான நிலைய மருத்துவ குழுவினரை தயார் நிலையில் இருக்கும்படி கேட்டுக் கொண்டார். விமானம் காலை 9.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் தரையிறங்கியது.  உடனடியாக மருத்துவ குழுவினர் விமானத்தில் ஏறி, கல்யாணசுந்தரத்தை பரிசோதித்தனர். ஆனால் அவர் சீட்டில் சாய்ந்தபடி உயிரிழந்த நிலையில் கிடந்தார். மருத்துவர்கள் பரிசோதித்துவிட்டு நுரையீரல் பாதிப்பால்   மாரடைப்பில் உயிரிழந்ததாக தெரிவித்தனர்.

இதையடுத்து விமான   நிலைய ஊழியர்கள் அவரது உடலை கீழே இறக்கினர். அதோடு விமானநிலைய போலீசுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் 174 பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: