ரிங் டோன் இசையமைக்க வாங்கிய ஊதியத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்..!!

சென்னை: வருமான வரித்துறை தொடர்ந்த வழக்கில் பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது. வரி ஏய்ப்பு செய்ததாக புகார் எழுந்திருந்த நிலையில் அது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற்ம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த லிப்ரா மொபைல்ஸ் நிறுவனத்திற்கு ரிங் டோன் இசையமைத்து கொடுத்தது தொடர்பாக ஏ.ஆர். ரஹ்மான் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தார். அதற்கு ஊதியமாக 3 கோடியே 47 லட்சம் ரூபாய் பெறப்பட்டது. இந்த தொகையை தன்னுடைய ஏ.ஆர்.ஆர். அறக்கட்டளைக்கு நேரடியாக செலுத்தி வரி ஏய்ப்பு செய்ததாக ஏ.ஆர். ரஹ்மான் மீது குற்றச்சாட்டு எழுந்தது. வருமான வரி செலுத்துவதை தவிர்க்க  ரஹ்மான் முயற்சித்ததாக கூறி வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. இந்த விசாரணையின் போது  ரஹ்மான் தரப்பு தனது விளக்கத்தை ஏற்றுக்கொண்டு விசாரணையை கைவிட்டதாக ஏற்கனவே முதன்மை ஆணையர் உத்தரவிட்டிருந்தார்.

முதன்மை ஆணையர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வருமான வரித்துறை மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்யும் போது அந்த உத்தரவு உறுதி செய்யப்பட்டது. கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிறப்பிக்கப்பட்ட அந்த உத்தரவை எதிர்த்து தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவானது இன்று நீதிபதிகள் சிவஞானம் மற்றும் பவானி சுப்ராயன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறை தெரிவிக்கும் குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும், புகார் தொடர்பாகவும் ஏ.ஆர். ரஹ்மான் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related Stories: