ஐகோர்ட் கிளை உத்தரவு அரசு பணியாளர்கள் தமிழில் தேர்ச்சி பெறுவது கட்டாயம்

மதுரை: தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே டி.கள்ளிப்பட்டியைச் சேர்ந்த ஜெய்குமார், தமிழ்நாடு மின் பகிர்மான கழக சின்னமனூர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக இருந்த இவர் பள்ளிப்படிப்பை தமிழ் வழியில் படிக்காததால், பணி விதிகளின்படி 2 ஆண்டிற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் ேதர்வில் தேர்ச்சி பெற வேண்டும். 2 ஆண்டுக்கு மேல் ஆன நிலையில், கடந்த ஜன.6ல் தேர்வு எழுதி தோல்வி அடைந்தார். இதையடுத்து கடந்த ஜூன் 16ல் இவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். இதை ரத்து செய்யக்கோரி ஜெய்குமார், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் விசாரித்து அளித்த உத்தரவில், தமிழக அரசின் அலுவல் மொழியாக தமிழ் உள்ளது. அரசின் அனைத்து நடவடிக்கைகளும் தமிழிலேயே நடக்கிறது. எனவே, பணியாளர்களுக்கும் தமிழ்  பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். மின்பகிர்மான கழகத்தை பொறுத்தவரை அனைத்து நடவடிக்கைகளும் தமிழ் மொழியிலேயே மேற்கொள்ளப்படுகிறது. மின்வாரிய பணியை தொடர தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது கட்டாயம் என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, மனுதாரருக்கு மேலும் ஒரு வாய்ப்பு வழங்கலாம். அடுத்த தேர்வில் பங்கேற்று முடிவு வெளியாகும் வரை காலநீட்டிப்பு வழங்கலாம். அதிலும் தோல்வி அடைந்தால், பணி நீக்க நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ளலாம் என கூறியுள்ளார்.

Related Stories: