×

முத்து... முத்தா....

நன்றி குங்குமம் தோழி

* நமது முன்னோர்கள் கிடைப்பதற்கரிய மற்றும் விலை உயர்ந்த சில அரிய பொருட்களை கண்டறிந்து திறம்பட பயன்படுத்தி உள்ளனர். அவற்றில் நவரத்தினங்கள் ஒன்பது வகையான விலை உயர்ந்த அரிய மருத்துவத்தன்மை கொண்டவை. மனதிற்கு மகிழ்ச்சியையும் அளிப்பவை. இவற்றில் முத்து என்ற நவரத்தினமும் ஒன்று. மணிகளின் அரசன் என முத்து போற்றப்படுகிறது.

* பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் முத்தின் பயன்களை உணர்ந்து பயன்படுத்தியுள்ளனர். அக்கால இலக்கி யங்களிலும், பாடல்களிலும் முத்தின் மதிப்பு மற்றும் முத்துமாலைகள் பற்றியும் குறிப்புகள் உண்டு. பழங்கால தமிழ் மகளிர் முத்துமாலை அணிந்துள்ளனர். மற்றும் முத்துக்கள் நிரப்பப்பட்ட சிலம்புகளையும் அணிந்துள்ளனர்.

* சிப்பிகளினுள் விழும் நீர்த்திவலை அல்லது திடப்பொருளே உறைந்து, உருண்டு முத்து ஆக மாறுகிறது. முத்து உருவாகுதல் முத்து விளைகிறது என்ற சொல்லால் குறிப்பிடப்படுகிறது.

* மெல்லுடலிகள் என்ற பிரிவின் கீழ் வரும் கடல்வாழ் உயிரினங்களில் முத்துக்களை உற்பத்தி செய்யும் திறனுடைய க்வாட்ருலா, யூனியோ, மார்கரிட்டேனோ என்ற பெயருடைய சிப்பிகள் உள்ளன.

* கடலில் எல்லா இடங்களிலும் முத்து கிடைப்பதில்லை. குறிப்பிட்ட இடங்களில் மட்டுமே முத்து கிடைக்கிறது.

* முத்துக்கள் என்பது அரகோனானட் என்னும் ஒரு வகையான சுண்ணாம்பு (கால்சியம் கார்பனேட்) படிகங்களால் ஆனவையாகும்.

*கடற்கரையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கும், சுமார் இருபது மீட்டர் வரை உள்ள ஆழங்களில் சிப்பிகள் படுகைகளாக காணப்படுகிறது. மூச்சடக்கிக் கொண்டு கடலுக்குள் மூழ்கி இச்சிப்பிகளை சேகரித்து வருதலே முத்து குளித்தல் எனப்படுகிறது. தற்போது நவீன முறைகளில் சிப்பிகள் அள்ளப்படுகின்றன.

* எல்லா சிப்பிகளிலும் முத்து காணப்படுவதில்லை.

* உலக அளவில் மன்னார்வளைகுடா மற்றும் பாரசீக வளைகுடா பகுதியில் சிறப்பான முத்துக்கள் கிடைக்கின்றன. பஹ்ரெய்ன், கலிபோர்னியா, பனாமா போன்ற இடங்களில் முத்துக்கள் கிடைக்கின்றன. பெர்சியன் வளைகுடாவிலிருந்து கிடைக்கும் முத்துக்களே மிகச் சிறப்பானதென கருதப்படுகிறது.

* முத்துக்கள் பல வகைப்படும். ஆழ்கடலில் எடுக்கப்படும் முத்து உயர் ரகமாகும்.

* பத்து நிறங்களில் முத்து கிடைக்கிறது. எனினும் பொதுவாக கிரீம் நிறமாகவோ அல்லது பிங்க் நிறமாகவோதான் இருக்கும்.

* வெள்ளை, நீலம், சாம்பல், பிரவுன் நிறங்களிலும் முத்து காணப்படுகிறது. அந்த மான் தீவுகளில் கருப்புநிற முத்துக்கள் கிடைக்கின்றன.

* பொதுவாகவே முத்துக்கள் உருண்டையாக இருக்கும். ஆனாலும் நீர்த்துளியின் வடிவத்திலோ சற்று ஒழுங்கற்ற உருண்டை வடிவத்திலேயோ முத்து காணப்படலாம்.

* முத்துச்சிப்பிகளின் ஆயுட்காலம் ஐந்தரை ஆண்டுகளாகும். முத்துக்களின் வாழ்நாட்கள் 100 முதல் 300 ஆண்டுகளாகும். சில முத்துக்கள் 500 ஆண்டுகள் வரை இருக்கும். அதன்பின் முத்துக்களின் பளபளப்பு குறைந்து நிறம் மங்குவதுடன் முத்துக்கள் மேல் வெடிப்பு ஏற்படும்.

* முத்துக்களை யார் வேண்டுமானாலும் அணியலாம். முத்து அணிந்தால் முத்து உடலில் பட்டு கரையும். அப்போது உடல் சூடு நீங்குமென மருத்துவ நூல்கள் குறிப்பிடுகின்றன.

*  உலக அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஜப்பான் நாடு. இந்திய அளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது ஐதராபாத் நகரம். தமிழ்நாடளவில் முத்து என்றதும் நினைவுக்கு வருவது தூத்துக்குடி.

* சீனா, ஜப்பான், ஹாங்காங், இலங்கை நாடுகளில் இருந்து முத்துக்கள் நம் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டு மும்பையில் பெருமளவில் விற்பனையாகின்றன.

* வியாபாரிகள் இம்முத்துக்களை வாங்கி தரத்திற்கேற்ப பிரித்து பதப்படுத்தி மெருகூட்டி வடிவமைத்து தனியாகவோ, நகைகளில் சேர்த்தோ விற்கின்றனர்.

* சந்தையில் விற்கப்படும் முத்துக்கள் மீன் வாசனையோடு இருக்கும்.

* சில வகையான ரசாயனக் கரைசலில் முத்துக்களை மூழ்க வைத்து உலர வைக்கும்போதுதான் முத்துக்கள் வெண்மை நிறத்தைப் பெறுகின்றன.
* இந்தியாவில் ராஜஸ்தான் மாநில பெண்கள்தான் அதிக அளவில் முத்து மாலைகளை செய்து அணிந்துகொள்கின்றனர்.

* தற்போது சிப்பிகளினுள் திரவத்தை செலுத்தி செயற்கை முத்து தயாரிக்கிறார்கள். 12-ம் நூற்றாண்டிலேயே சீனர்கள் வளர் முத்துக்களை உருவாக்கியுள்ளனர். செயற்கை முத்துக்களின் தந்தை எனப்படுபவர் மிகிமாட்டோ என்ற ஜப்பானியர். இவர் 1893ல் முதல் முறையாக செயற்கை முறையில் முத்தை உருவாக்கினார்.

* ஜப்பான் நாட்டில் செயற்கை முத்துக்கள் நன்முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது.

* முத்துக்களை ஒன்றுடன் ஒன்று உரசாமல் வைக்க வேண்டும்.

* தங்க நகைகளோடோ அல்லது இதர ஆபரணங்களோடோ முத்து நகைகளை வைக்க வேண்டாம். ஏனெனில் அப்படி வைத்தால் முத்துக்களில் கீறல் விழும்.

* காற்றுப்புகாத அறைகளில் முத்து ஆபரணங்களை வைக்க வேண்டாம். ஸ்பிரே மற்றும் வாசனைப் பொருட்களுடன் முத்துமாலைகளைவைக்க வேண்டாம்.

* முத்துமாலையைப் போடுவதற்கு முன்பும், கழட்டிய பின்பும் பருத்தி துணியால் சுத்தம் செய்யவும்.

* கரடு முரடான ஆயுதங்களால் முத்தை எடுக்கக் கூடாது.

* காகிதம், சாயம் போகும் துணியில் முத்தை வைக்க வேண்டாம். இவற்றால் முத்தை துடைக்கக் கூடாது.

* அமிலங்கள், ரசாயனப் பொருட்களுக்கு அருகே முத்துக்களை வைக்க வேண்டாம்.

* முத்தில் புரதச்சத்து, சுண்ணாம்புச்சத்து உள்ளது.

* முத்து சிறந்த மருத்துவப் பொருள். பல்வேறு நோய்களை முத்து தீர்க்கிறது.

* முத்துக்களை பல்வேறு மூலிகை சாறுகளால் பாடம் செய்து பொடியாக்கி பல்வேறு மருந்துகளை தயாரிக்கிறார்கள்.

* முத்து இளமையை காக்கும். உற்சாகத்தைக் கூட்டும்.

* அழகு சாதனங்கள், பற்பசைகள் தயாரிக்க முத்து பயன்படுகிறது.

* நெஞ்சு எரிச்சல், மூலநோய், கண் எரிச்சல், இழுப்பு, தலைவலி போன்ற நோய்களை குணப்படுத்த முத்து பயன்படுகிறது.

* முக்த பஷ்மா, பிதாந்தரா ரசா, வசந்த மகாரா ரசா போன்றவை முத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் சில மருந்து வகைகள்.

* அறிவியல் மொழியில் முத்து மைதிலஸ் மார்ஜெரிடிபெரஸ் எனப்படுகிறது.

*  முத்து சமஸ்கிருதத்தில் முக்தா எனவும், ஆங்கிலத்தில் பியர்ல் எனவும், இந்தியில்  மோதி எனவும், தெலுங்கில் முத்தியாமு எனவும்,பெர்சியன் மொழியில் மார்வாரிப் எனவும் அழைக்கப்படுகிறது.

- சா.அனந்தகுமார், அகஸ்தீஸ்வரம்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!