சென்னையில் ஐ.டி., நிறுவன அதிகாரி தற்கொலை: செல்போனில் பேசிய வீடியோ வெளியானதால் அலுவலக மேலாளர் கைது!!

சென்னை:  சென்னையில் ஐ.டி., உதவி மேலாளரின் தற்கொலைக்கான காரணம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஏழுகிணறு பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவரே நேற்று தற்கொலை செய்துகொண்டவராவர். அண்ணா சாலையில் இயங்கி வரும் ராயலா டவரில் உள்ள கேம்ஸ் என்னும் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் உதவி மேலாளராக பிரபாகரன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவர் பணியில் இருந்தபோது திடீரென அலுவலகத்தின் 8வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அண்ணா சாலை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதற்கிடையில் பிரபாகரன் தற்கொலைக்கு முன் அவருடைய செல்போனில் பேசிய வீடியோ ஒன்று தற்போது வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, தனது தற்கொலைக்கு அலுவலக மேலாளரே காரணம் என்றும், தொடர் மன உளைச்சலால் தற்கொலை செய்ய போவதாகவும், அவருக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் எனவும் பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ள வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. இதனையடுத்து இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் ஐ.டி., ஊழியரை தற்கொலைக்கு தூண்டிய வழக்கில் தனியார் நிறுவன மேலாளர் செந்திலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: