பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தேர்வு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் பிரெஞ்சு, ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி

சென்னை : பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் பழனிசாமி வெளியிட்டார்.

இதுதொடர்பாக, தமிழக அரசு இன்று (செப். 8) வெளியிட்ட செய்தி வெளியீடு:

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால் 13.9.2016 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பில், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட நூல்கள், உலக மொழிகளான பிரெஞ்சு, ஜெர்மன் மொழிகளிலும், இந்திய மொழிகளான மலையாளம், இந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். இப்பணிகளை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார்.

அந்த அறிவிப்பினை செயல்படுத்திடும் வகையில், தமிழ்நாடு அரசால் 15 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, மொழிபெயர்ப்பு பணிகள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட்டது. அவ்வகையில், முதற்கட்டமாக பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் 19.2.2019 அன்று வெளியிட்டார்.

அதன் தொடர்ச்சியாக, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் வாயிலாக, பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் தெரிவு செய்யப்பட்ட 1,837 பாடல்களின் பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் மொழிபெயர்ப்பு நூல்களை முதல்வர் நேற்று (செப். 7) வெளியிட்டார்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: