முதல்வர் எடப்பாடி கண்தானம் செய்தார்

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை அளித்தார். இந்தியாவில் 68 லட்சம் பேர் கருவிழி பாதிப்பினால் பார்வை இழந்துள்ளனர். அதில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும், இளைஞர்களும் ஆவர். தற்போது ஒருவரிடம் தானமாக பெறப்படும் இரு கண்கள், எளிய கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் இரண்டு பேர் கண்பார்வை பெற்று பயனடைவதுடன், கூடுதலாக கண்களின் பிற பாகங்களும் தேவைக்கேற்ப கண் பார்வை பாதிக்கப்பட்டவர்களின் சிகிச்சைக்கும் பயன்படுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் கண்தானம் செய்ய விரும்புவோர் குறித்த பதிவேட்டினை ஏற்படுத்தும் வகையிலும் www.hmis.tn.gov.in/eye-donor என்ற இந்த புதிய இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளம் மூலம், கண்தானம் செய்ய விரும்புவோர், தங்களது பெயர், இருப்பிட முகவரி, கைப்பேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்ற தகவல்களை பதிவு செய்து, கண் தானத்திற்கான உறுதிமொழியினை ஏற்ற பின்பு, அதற்கான சான்றிதழை நேரடியாக இணையதளத்தின் வாயிலாகவே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், சான்றிதழை பதிவு செய்யப்பட்ட மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நேற்று தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியினை அளித்ததை தொடர்ந்து, அதற்கான சான்றிதழை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமை செயலாளர் சண்முகம், மருத்துவ கல்வி இயக்குநர் நாராயணபாபு, மாநில நலவாழ்வு குழும இயக்குநர் செந்தில்ராஜ், தமிழ்நாடு மாநில கண்பார்வையிழப்பு தடுப்பு சங்கத்தின் திட்ட இயக்குநர் எஸ்.வி.சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: