ஆம்னி பஸ்கள் 30ம் தேதி வரை ஓடாது: உரிமையாளர்கள் முடிவு

சென்னை: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 30ம் தேதி வரை ஆம்னி பஸ்கள் இயங்காது என அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கங்களின் கூட்டம் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்தில், தமிழ்நாடு உரிமம் பெற்ற ஆம்னி பேருந்துகளுக்கு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 2 காலாண்டு (ஆறு மாதம்) சாலை வரியை பேருந்துகளை இயக்காத காலங்களுக்கு முழுவதுமாக தள்ளுபடி செய்ய வேண்டும். ஆம்னி பேருந்துகளில் 100% பயணிகளுடன் பேருந்துகளை இயக்க பிற மாநிலங்களைப் போல் தமிழக அரசும் அனுமதிக்க வேண்டும். குளிர்சாதன வசதி உள்ள ஆம்னி பேருந்துகளை இயக்க அனுமதிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 30ம் தேதி வரை ஆம்னி பேருந்துகளை இயக்க வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டது’ எனக் கூறப்பட்டுள்ளது.

Related Stories: