சென்னை: கோவாக்சின் தடுப்பு மருந்து பாதுகாப்பானது, அதனால் எந்த பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்றும் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தடுப்பூசி சோதனை மையம் தெரிவித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுடன் இணைந்து ஹைதராபாத்தில் செயல்பட்டு வரும் பாரத் பயோடெக் நிறுவனமானது, கொரோனாவைத் தடுக்கும் மருந்தைக் கண்டறிவதில் இறுதி நிலையை எட்டியதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு அந்த மருந்தை அளித்து பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாக்சின் எனப்படும் அந்த மருந்தை அடுத்த சில மாதங்களுக்குள் பொது மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தைப் பொருத்தவரை காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.