அடுத்த 2 நாட்களுக்கு ஈரோடு, கரூர், திருச்சி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை: தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் அடுத்த 2 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக  பெரும்பாலான மாவட்டங்கள் மற்றும்  புதுவை, காரைக்கால் பகுதிகளின் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கரூர், மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும்.  கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஏறகாடு மற்றும் ஏத்தாப்பூர் பகுதிகளில் தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.  மேலும், திருவண்ணாமலை, பாரூர், சூளகிரி், சூலூர், சுராலகோடு பகுதிகளில் தலா 6 செ.மீ, ஆத்தூர், சேலூர், போச்சம்பள்ளி, பொன்னாகரம், சிவலோகம் பகுதிகளில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* செப்டம்பர் 3ம்(இன்று) தேதி,  தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல், தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, கேரளா, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர்4ம் தேதி, தென்கிழக்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், தெற்கு மகாராஷ்டிரா கடலோரப் பகுதி, லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 3 முதல் 6ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* செப்டம்பர் 7ம் தேதி, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும். அதேபோல், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 40-50 கி.மீ வேகத்திலும், குமரிக்கடல், மன்னார் வளைகுடா, லட்சத்தீவு மற்றும் மாலத்தீவு பகுதிகளில் சூறாவளி காற்று 40-50 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

 

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென் தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 03.09.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.3 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: