பெங்களூரு : சந்திராயன் 3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை சோதிக்க நிலவில் உள்ளது போன்ற பள்ளங்களை செயற்கையாக உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவில் பல மர்மங்களை உள்ளடக்கிய தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அடுத்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை செலுத்த உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. விண்ணில் ஏவுவதற்கு முன்பாக விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவி சோதனை செய்யப்பட உள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவிக்கான சோதனைகளில் நிலவில் உள்ள பள்ளங்கள் முக்கிய பங்கு விகக்கின்றன. எனவே லேண்டரை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக அதனை கடும் சோதனைக்கு உட்படுத்த இஸ்ரோ முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 215 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரதூர்கா மாவட்டம் சல்லகேர் தாலுகாவில் உள்ள உல்லார்தி காவலுவில் நிலவில் உள்ளது போன்ற செயற்கை பள்ளங்கள் அமைக்கப்பட உள்ளன.