சந்திராயன் 3 லேண்டரை கருவியை பரிசோதிக்க நிலவில் உள்ள பள்ளங்களை செயற்கையாக உருவாக்க இஸ்ரோ புதிய திட்டம்!!

பெங்களூரு : சந்திராயன் 3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவியை சோதிக்க நிலவில் உள்ளது போன்ற பள்ளங்களை செயற்கையாக உருவாக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவில் பல மர்மங்களை உள்ளடக்கிய தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அடுத்த ஆண்டு சந்திரயான் 3 விண்கலத்தை செலுத்த உள்ளது. இதற்கான பணிகள் நடந்து வருகிறது. விண்ணில் ஏவுவதற்கு முன்பாக விண்கலத்தில் உள்ள லேண்டர் கருவி சோதனை செய்யப்பட உள்ளது. சந்திராயன் 3 விண்கலத்தில் பொருத்தப்படும் லேண்டர் கருவிக்கான சோதனைகளில் நிலவில் உள்ள பள்ளங்கள் முக்கிய பங்கு விகக்கின்றன. எனவே லேண்டரை விண்ணில் ஏவுவதற்கு முன்பாக அதனை கடும் சோதனைக்கு உட்படுத்த இஸ்ரோ முயற்சி மேற்கொண்டுள்ளது. இதற்காக  கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து 215 கி.மீ. தூரத்தில் உள்ள சித்திரதூர்கா மாவட்டம் சல்லகேர் தாலுகாவில் உள்ள உல்லார்தி காவலுவில் நிலவில் உள்ளது போன்ற செயற்கை பள்ளங்கள் அமைக்கப்பட உள்ளன.

ரூ.24.2 லட்சம் மதிப்பில் 10 மீட்டர் விட்டம், 3 மீட்டர் ஆழத்தில் செயற்கை நிலவு பள்ளங்கள் உருவாக்கப்பட்டு லேண்டரை சோதனை செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. நிலவில் மென்மையாக தரை இறங்குவதற்காக லேண்டரில் உள்ள சென்சார்கள் இயங்கும் திறன் குறித்து இங்கு ஆய்வு செய்யப்பட உள்ளது. அதன்படி, செயற்கை பள்ளங்களுடன், சந்திரயான்-3 தரை இறங்குவதற்கான நிலவின் மேற்பரப்பின் மாதிரியை இஸ்ரோ உருவகப்படுத்தும். இதில் லேண்டரின் சென்சார்கள் செயல்திறன் (எல்.எஸ்.பி.டி.) என்ற முக்கியமான சோதனை செய்யப்படும். அதோடு செயற்கை நிலவு தளத்தில் இஸ்ரோவின் சிறிய விமானம் 7 கி.மீ. உயரத்தில் இருந்து ‘சென்சார்’களுடன் தரை இறங்கும். விமானம் தரையிறங்கும் மேற்பரப்பில் இருந்து 2 கி.மீ. உயரத்தில் இருக்கும்போது, ‘சென்சார்’கள் மென்மையான முறையில் லேண்டர் தரையிறங்க வழிகாட்டும். இதன்மூலம் லேண்டரை வழி நடத்துவதில் அது எவ்வளவு திறமை வாய்ந்தது என்பது கண்டறியப்படும்.

Related Stories: