பாஜ மாநில தலைவர் முன்னிலையில் கட்சியில் சேர வந்த ரவுடி நெடுங்குன்றம் சூர்யாவின் கூட்டாளிகள் 2 பேர் கைது

சென்னை: தாம்பரம் அடுத்த மண்ணிவாக்கம் பகுதியில் செங்கல்பட்டு மாவட்ட பாஜ சார்பில், மாவட்ட தலைவர் பலராமன் தலைமையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 200க்கும் மேற்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், தமிழக பாஜ தலைவர் எல்.முருகன், மாநில பொது செயலாளர் கே.டி.ராகவன் மற்றும் பாஜ நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், பிரபல ரவுடியான நெடுங்குன்றம் சூரியா கலந்து கொள்வதாக ஓட்டேரி காவல் நிலையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் ஓட்டேரி காவல் நிலைய ஆய்வாளர் (பொறுப்பு) கிருஷ்ணகுமார் தலைமையில், உதவி ஆய்வாளர் திலீப்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அப்போது, போலீசாரை கண்ட சூர்யா பாஜ நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி அங்கிருந்து போலீஸ் பாதுகாப்புடன் தப்பிச் சென்றுவிட்டான். பின்னர், அங்கு சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த 6 பேரை போலீசர் பிடித்தனர். அவர்கள் வந்த காரில் சோதனை செய்தனர். அப்போது, அதில் சிறிய அளவிலான கத்தி ஒன்று இருந்தது. இதனையடுத்து கத்தி வைத்து இருந்ததற்காக சென்னையை சேர்ந்த ஜோசப் பெஞ்சமின் (20) மற்றும் படப்பை பகுதியை சேர்ந்த சரத்குமார் (29) ஆகிய இருவரை கைது செய்தனர்.

Related Stories: