குடும்பத்தில் 3 பேருக்கு ஒரே போன் ஆன்லைன் வகுப்பில் படிக்க முடியாமல் மாணவி தற்கொலை: உளுந்தூர்பேட்டை அருகே பரிதாபம்

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே மேட்டு நன்னாவரம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஆறுமுகம். இவரது மனைவி சுமதி. இவர்களது மகள்கள் நித்யஸ்ரீ(18), சுபஸ்ரீ(17), காவியஸ்ரீ(16). நித்யஸ்ரீ திருச்சியில் உள்ள ஒரு தனியார் நர்சிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வந்தார். சுபஸ்ரீ முதலாம் ஆண்டும், காவியாஸ்ரீ 11ம் வகுப்பும் படிக்கின்றனர். 3 மாணவிகளும் ஆன்லைன் வகுப்பில் கல்வி பயில செல்போன் தேவைப்பட்ட நிலையில் ஆறுமுகம் ஒரு செல்போன் வாங்கி கொடுத்து மூன்று பேரையும் படித்துக்கொள்ளுமாறு கூறியுள்ளார்.

அனைவருக்கும் ஒரே நேரத்தில் ஆன்லைன் கல்வி கற்க செல்போன் தேவைப்பட்டதால் பிரச்னை ஏற்பட்டுள்ளது. இதனை தந்தை ஆறுமுகம் கண்டித்ததால் மனம் விரக்தி அடைந்த நித்யஸ்ரீ, கடந்த 25ம் தேதி வீட்டில் எலிபேஸ்ட் சாப்பிட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று முன்தினம் நித்யஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் நன்னாவரத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: