ராஞ்சி: புதிய தளர்வுகள் ஏதுமின்றி வருகிற செப். 30ம் தேதி வரை ஊரடங்கை நீடித்து ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா வைரஸ் தொற்றுக்கான ஊரடங்கு கட்டுப்பாடுகளை செப். 30ம் தேதி வரை நீடித்து ஜார்க்கண்ட் மாநில அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில உள்துறை மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை வெளியிட்ட அறிவிப்பில், ‘செப். 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுகிறது. அரசு அறிவித்துள்ள விதிமுறைகளை மக்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். புதிய வழிகாட்டுதலில் சிறப்பு விலக்கு எதுவும் வழங்கப்படவில்லை. ஆனால் அனைத்து பொருளாதார நடவடிக்கைகளையும் கட்டுப்பாட்டு மண்டலத்திற்கு வெளியே நடத்திக் கொள்ளலாம். அதே நேரத்தில், சமூக, அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார மற்றும் மத நிகழ்ச்சிகள், கண்காட்சிகள், ஊர்வலங்கள் மற்றும் பிற பெரிய நிகழ்வுகள் தொடர்ந்து தடை செய்யப்படும்.