சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது கடுமையான உழைப்புக்கான பலனை வரும் தேர்தலில் பெறுவார் என்றும், அவர் மேலும் பல வெற்றிகளை குவிக்க கே.எஸ்.அழகிரி வாழ்த்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அண்ணா மறைவிற்குப் பிறகு தமது இறுதிக் காலம் வரை ஏறத்தாழ 50 ஆண்டுகள் திமுகவின் தலைமையை ஏற்று பல சோதனைகளை சந்தித்து சாதனை புரிந்தவர் கலைஞர். அவரது மறைவிற்குப் பிறகு கடந்த 2018 ஆகஸ்ட் 28 அன்று திமுக தலைவராக ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மு.க.ஸ்டாலின். மிகப்பெரிய ஆளுமை கொண்ட கலைஞர் மறைவிற்குப் பிறகு திமுகவை கடந்த இரண்டு ஆண்டுகளாக கடுகளவு சேதாரமும் இல்லாமல் கட்டுக்கோப்பாக கடமை, கண்ணியம், கட்டுப்பாடுடன் இயக்கத்தை மிகச் சிறப்பாக வழிநடத்தி வருகிறார். தேசிய அளவிலும், மாநில அளவிலும் அரசியலில் தமக்கென தனி முத்திரையை பதித்து வருகிறார். மத்தியில் நடைபெற்று வரும் வகுப்புவாத பாஜவையும், மாநிலத்தில் நடைபெற்று வரும் அதிமுகவின் அராஜக ஊழல் ஆட்சியையும் எதிர்த்துப் போராடி வருகிறார். அவர் திமுக தலைவர் மட்டுமல்ல, தமிழகத்தின் எதிர்கட்சித் தலைவரும் கூட. அந்தப் பணியை நாள்தோறும் அரசியல் பேராண்மையோடு நிகழ்த்தி வருகிறார்.