தொன்மையான இடங்களை பாதுகாக்க திருச்சி உட்பட 7 நகரங்கள் தொல்லியல் துறையில் சேர்ப்பு

புதுடெல்லி: தொன்மை வாய்ந்த பழமையான இடங்களை பாதுகாக்கவும், பராமரிக்கவும் திருச்சி உட்பட 7 நகரங்கள் தொல்லியல் துறையின் புதிய வட்டங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. மத்திய தொல்லியல் துறை நாடு முழுவதும் பழங்கால சிறப்புமிக்க இடங்களை 29 வட்டங்களாகவும், 3 சிறு வட்டங்களாகவும் அடையாளம் கண்டு பிரித்துள்ளது. அங்கு தொல்லியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, பழங்கால நினைவுச் சின்னங்கள், பொருட்கள் பாதுகாத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இதனை மேலும் விரிவுபடுத்தும் வகையில், தற்போது புதிதாக 6 வட்டங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதற்கான அறிவிப்பை மத்திய கலாச்சார துறை அமைச்சர் பிரகலாத் படேல் நேற்று வெளியிட்டார். அவர் கூறுகையில், ‘‘திருச்சி (தமிழகம்), ராய்கஞ்ச் (மேற்கு வங்கம்), ராஜ்கோட் (குஜராத்), ஜபல்பூர் (மபி), ஜான்சி (உபி) மற்றும் மீரட் (உபி) ஆகிய நகரங்கள் தொல்லியல் துறையின் புதிய வட்டங்களாக சேர்க்கப்பட்டுள்ளன. அதோடு, கர்நாடகாவின் சுற்றுலாதளமான ஹம்பி நகரம் தொல்லியல் துறையின் சிறு வட்டமாக இருந்தது. தற்போது அது பெரு வட்டமாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம், இன்னும் அதிகமான பழமையான இடங்கள் பாதுகாத்து பராமரிக்கப்படும்,’’ என்றார்.

Related Stories: