பாடகர் எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: சர்வதேச மருத்துவர்கள் சிகிச்சை

சென்னை: எஸ்.பி.பி உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. எஸ்.பி.பி.க்கு சிகிச்சை அளித்துவரும் சென்னை தனியார் மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. பாடகர் எஸ்.பி.பி.க்கு சர்வதேச மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்டி லேட்டர் மற்றும் எக்மோ கருவி பொருத்தி எஸ்.பி.பி.க்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 5-ம் தேதி முன்னணி பாடகர் எஸ்.பி.பிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. உடனடியாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பலரும் தொலைபேசியில் அழைத்ததால், உடனடியாக ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் தனக்கு லேசான கொரோனா தொற்று தான் எனவும் யாரும் கவலை கொள்ள வேண்டாம் என்று தெரிவித்தார். மேலும் இன்னும் இரண்டு நாட்களில் குணமாகி வீடு திரும்பிவிடுவேன் என்று அந்த வீடியோ பதிவில் பேசியிருந்தார் எஸ்.பி.பி.

இதனிடையே இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில், கடந்த ஆகஸ்ட் 5ம் தேதி கொரோனா வைரஸ் நோய் அறிகுறி காரணமாக அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவ நிபுணர்கள் குழுவின் அறிவுரைகளின்படி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது உயிர்காக்கும் கருவிகளுடன் இருந்து வரும் அவரது உடல் நிலை ஆபத்தான கட்டத்தில் உள்ளது. இவர் தற்போது தேசிய மற்றும் சர்வதேச மருத்துவ நிபுணர்களின் தீவிர சிகிச்சைக் கண்காணிப்பில் இருந்து வருகிறார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

முன்னதாக பின்னணி பாடகர் எஸ்.பி.பி குணமடைய வேண்டி தமிழகம் முழுவதும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளனர். திரை பிரபலங்கள், இசையமைப்பாளர்கள், இசைக் கலைஞர்கள், பொதுமக்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். பாரதிராஜா அழைப்பு விடுத்ததன் பேரில் திரைப் பிரபலங்கள், இசைக்கலைஞர்கள் பிரார்த்தனை செய்தனர். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி பிரார்த்தனையில் ஈடுபட்டனர். நடிகர்கள் சரோஜாதேவி, சிவக்குமார், பார்த்திபன், ராதிகா உள்ளிட்டோரும் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இயக்குநர்கள் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், வசந்த், ஆர்.வி.உதயகுமார் உள்ளிட்டோரும் பிரார்த்தனை செய்தனர். நடிகர்கள் பிரபு, சரத்குமார், சத்யராஜ், பாடகர்கள் சித்ரா, மனோ உள்ளிட்டோரும் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

Related Stories: