மணப்பாறை அருகே டாஸ்மாக்கில் ரூ.5.39 லட்சம் மாயம்!: பணத்தை கொள்ளையடித்து நாடகமாடிய 2 பேர் கைது..!!

திருச்சி: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே டாஸ்மாக் கடையில் 5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் கொள்ளைபோனதாக நாடகமாடிய கடை விற்பனையாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மேட்டுக்கடையில் உள்ள மதுக்கடையில்  5 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மாயமானதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு டாஸ்மாக் கடையின் கதவு திறந்துகிடந்ததாக காவலாளி தகவல் தெரிவித்துள்ளார். காவலாளி கொடுத்த தகவலில் பேரில் மதுக்கடைக்கு சென்று பார்த்த போது பணம் காணவில்லை என தெரியவந்துள்ளது.

இதனையடுத்து கடையின் மேற்பார்வையாளர் சுப்பிரமணி என்பவர் மணப்பாறை காவல் நிலையத்தில் பணம் கொள்ளைபோனதாக தெரிவித்தார். காவல்துறை விசாரணை நடத்தியதில் பணியில் இருந்த விற்பனையாளர்கள் மணிவாசகம், மாரியப்பன் இருவரும் முன்னுக்கு பின் முரணான தகவல்களை அளித்துள்ளனர். இதனால் கடை ஊழியர்களால் பணம் கையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. காவல்துறை நடத்திய தொடர் விசாரணையில் விற்பனையாளர்கள் இருவரும் பணத்தை கையாடல் செய்துவிட்டு கொள்ளைபோனதாக நாடகமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து மணிவாசகம் வீட்டில் இருந்து பணத்தை பறிமுதல் செய்த போலீசார் இருவரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: