நாளை மறுநாள் முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்திற்குள் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல விண்ணப்பித்தால் 17ம் தேதி முதல் அனைவருக்கும் எவ்வித தாமதமும் இல்லாமல் இ-பாஸ் வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து வருகிற 31ம் தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல வேண்டும் என்றால் இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் கடந்த 5 மாதங்களாக பொதுமக்கள் யாரும் சொந்த ஊர்களுக்கு கூட செல்ல முடியாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். திருமணம், இறப்பு, உடல்நிலை சரி இல்லை என்றால் மட்டுமே இ-பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.

ஆனாலும், இ-பாஸ் விண்ணப்பித்தால் உடனடியாக அனுமதி கிடைப்பதில்லை. இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால்தான் இ-பாஸ் பெற முடிகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. மத்திய அரசு கூட இ-பாஸ் திட்டத்தை கடந்த 1ம் தேதியில் இருந்து ரத்து செய்து விட்டது. தமிழக அரசு மட்டும் ரத்து செய்யாமல் இருந்தது. இதுபற்றி திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் மற்றும் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், டாக்டர்கள் உள்ளிட்ட பலரும் இ-பாஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர். பொதுமக்களும், இ-பாஸ் வாங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், உண்மையான காரணங்கள் கூறினால் நிராகரிக்கப்படுகிறது. இடைத்தரகர்களுக்கு பணம் கொடுத்தால் மட்டும் உடனடியாக இ-பாஸ் பெற முடிகிறது என்று பகிரங்கமாக குற்றம் சாட்டினர்.

இந்நிலையில், முதல்வர் எடப்பாடி  பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா நோய் தொற்றின் நிலையை கருத்தில் கொண்டு,  ஊரடங்கில் படிப்படியாக தளர்வுகள் வழங்கப்பட்டு வருகிறது. நோய் தொற்று பரவுவதை தடுக்க, திருமணம், அவசர மருத்துவம், நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல், வெளியிடங்களுக்கு சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் மாவட்டங்களுக்கு இடையே பயணிக்க இ-பாஸ் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது.  இதன்மூலம் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் கண்காணிக்கப்பட்டு, நோய் தொற்று ஏற்பட்டால் அவர்களுடன் தொடர்பு உடையவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்நிலையில், பொதுமக்கள் முக்கிய பணிகளுக்கு தடையின்றி தமிழ்நாடு முழுவதும் மாவட்டம் விட்டு மாட்டங்களுக்கு பயணிக்க 17ம் தேதி (நாளை மறுதினம்) முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை விவரங்களுடன் தொலைபேசி, செல்போன் எண்ணுடன் விண்ணப்பித்தால், இ-பாஸ் அனுமதி எவ்வித தாமதமும் தடையுமின்றி உடனுக்குடன், அனைவருக்கும் வழங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்களின் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை, அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும். தவிர்க்க இயலாத பணிகளுக்கு மட்டும் விண்ணப்பம் செய்து, இ-பாஸ் பெற்று பயணிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொடரும்

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வர தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறை தொடர்ந்து அமலில் இருக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

Related Stories: