அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம்

சென்னை: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒடிசா மற்றும் மேற்குவங்க கடலோர பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிரிஷ்ணகிரி மாவட்டங்களில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டதுடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலையாக 33 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியசும் நிலவக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் வேலாவில் 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மேலும், கூடலூர் பஜார், பந்தலூர், சேருமுல்லே, ஹாரிசன் எஸ்டேட், பிறையார் எஸ்டேட், நடுவட்டம், சத்தியபாமாக பல்கலை, மேலாளத்தூர் பகுதிகளில் தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை

* ஆகஸ்டு 14(இன்று) முதல் 16ம் தேதி வரை, மத்திய மேற்கு வங்கக்கடல், வடக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், ஒடிசா, ஆந்திர கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.

* ஆகஸ்டு 14 முதல் 18ம் தேதி வரை, தென்மேற்கு அரபிக்கடல், மத்திய மற்றும் வடக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று 50-60 கி.மீ வேகத்திலும், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் கோவா கடலோர பகுதிகளில் பலத்த காற்று 45-55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.

எனவே, மீனவர்கள் மேற்கண்ட பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள். தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல்  தனுஷ்கோடி வரை 15.08.2020 இரவு 11.30 மணி வரை கடல் உயர் அலை 3.0 முதல் 3.2 மீட்டர் வரை எழும்பக்கூடும், என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related Stories: