உறவினர்களிடம் பேசத்தானே அனுமதி கேட்கிறார்கள் நளினியும், முருகனும் அமெரிக்க அதிபர் தேர்தலை பற்றியா பேசப் போகிறார்கள்? மத்திய அரசு வக்கீலிடம் ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை: ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகனை, லண்டனில் உள்ள முருகனின் சகோதரியுடனும், இலங்கையில் உள்ள முருகனின் தாயுடனும் வாட்ஸ் அப் வீடியோ மூலம் பேச அனுமதி கோரி நளினியின் தாய் பத்மா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் வேலுமணி அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசுத்தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் நடராஜன், நளினி மற்றும் முருகனை வெளிநாடுகளில் உள்ள உறவினர்களுடன் பேச அனுமதிப்பது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக தெரிவித்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கார்த்திகேயன் இருவரையும் பேச அனுமதித்தால், விசாரணை பாதிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதிகள், முருகனின் தந்தை இறப்பு குறித்து தான் இருவரும் பேச போகிறார்களே தவிர அமெரிக்க அதிபர் தேர்தல் குறித்தா பேச போகிறார்கள் என்று கேட்டனர். மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட பன்முக விசாரணை முகமை தற்போது செயல்பாட்டில் உள்ளதா? அல்லது விசாரணைக்காக கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து வரும் ஆகஸ்ட் 19ம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.

Related Stories: