சென்னை: பிரசவித்த பெண் திடீரென இறந்ததால், அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நீலாங்கரை அடுத்த வெட்டுவாங்கேணி பகுதியை சேர்ந்தவர் நடராஜன். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவரது மனைவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால், கடந்த மாதம் 24ம் தேதி திருவல்லிக்கேணியில் உள்ள கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு, அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, 30ம் தேதி அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். வீட்டிற்கு வந்த மறுநாளே அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், 31ம் தேதி மீண்டும் கஸ்தூரிபா காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.