புதுடெல்லி: வேளாண் உள்கட்டமைப்பு நிதியத்தின் மூலம், விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் கோடி கடனுதவி அளிப்பதற்கான திட்டத்தை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். கடந்த மே மாதம் 12ம் தேதியன்று ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக உரையாற்றிய பிரதமர் மோடி, பொருளாதார மீட்பு நடவடிக்கைக்காக ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு திட்டத்தினை அறிவித்தார். அதில், ஒரு லட்சம் கோடி வேளாண் கட்டமைப்புக்கும் ஒதுக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்திருந்தார். அந்த திட்டம் இன்று தொடங்கப்படுகிறது. அறுவடை செய்யப்பட்ட பிறகான விவசாயப் பணிகளுக்கு இந்த நிதி செலவழிக்கப்படும். அறுவடை செய்த வேளாண் பொருட்களைப் பாதுகாப்பது, அவற்றை பல இடங்களிலும் இருந்தும் பெற்றுக் கொள்வது, அவற்றை குளிர்சாதன வசதியுடன் கூடிய பாதுகாப்பு மையங்களை அமைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துதற்காக இந்த நிதி செலவிடப்படும்.